சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
44 - கனங்கள் கொண்ட (திருச்செந்தூர்) Songs from this thalam திருச்செந்தூர் 1334 - கன்றிவரு நீல
44 திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 34 )
கனங்கள் கொண்ட
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள் கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
கண்க ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக்
கரங்க ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப்
பொனின்கு டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ
ருந்தி யன்பு நண்பு பண்பு ...... முடனாகப்
புணர்ந்து டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
ரிந்து சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ
அனங்க னொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா
அடர்ந்த டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
ரிந்த அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே
சினங்கள் கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரந்தெ
ரிந்த வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே
சிவந்த செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.
Easy Version:
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து
விஞ்சும் கண்களும் சிவந்து அயர்ந்து
களி கூரக் கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும்
கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி
பொ(ன்)னின் குடங்கள் அஞ்சு(ம்) மென்தனங்களும்
புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாகப்
புணர்ந்து
உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து
சந்ததம் திரிந்து படுவேனோ
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்
திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா
அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்
புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம்
சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே. Add (additional) Audio/Video Link
விஞ்சும் கண்களும் சிவந்து அயர்ந்து ... மேகம் போன்ற கூந்தலும்
குலைந்து அலைந்து, விளங்கும் கண்கள் சிவந்து சோர்வுற்று,
களி கூரக் கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும்
கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி ... மகிழ்ச்சி மிகுந்து
கைகளும் கூப்பி நெஞ்சத்தினுள்ளே உணர்ச்சி பெருகித் திரிகின்ற
பெண்கள் மீது மயல் உண்டாகி, (அவர்களுடன் கூட) விலை பேசி,
பொ(ன்)னின் குடங்கள் அஞ்சு(ம்) மென்தனங்களும்
புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாகப்
புணர்ந்து ... பொன் குடங்களும் அஞ்சும் என்று கூறத் தக்க
மார்பகங்களையும் தோள்களையும் தழுவி, அன்பும், நட்பும்,
குணமும் ஒன்றாகக் கூடி,
உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து
சந்ததம் திரிந்து படுவேனோ ... உடனே ஊடியும், பின்பு கலந்தும்,
மனம் குழைந்தும், கேடு விளைவித்தும் எப்போதும் இவ்வாறே
திரிந்து அழிவேனோ?
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்
திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா ... மன்மதன் வாடி,
நைந்து, வெந்து அழிந்து சிதறும்படி அன்று (நெற்றிக்) கண்ணைத்
திறந்து விழித்தவரும், கரிய கழுத்தை உடையவருமான சிவபெருமான்
பெற்றெடுத்த கூரிய வேலனே,
அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்
புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே ... கூட்டம் கூட்டமாய்
நெருங்கி எதிர்த்து வந்த வஞ்சகர்களாகிய அசுரர்கள் பயப்படும்படி
கொடிய போர் செய்தவனும், அன்பர்களுக்கு இன்பம் தருபவனும்
ஆன நண்பனே, வீரனே,
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம்
சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே ... கோபம் கொண்டு,
இலங்கை அரசனான ராவணனுடைய தலைகள் சிதற கொடிய
அம்பை ஏவிய ராமன் (திருமால்) அன்பு கொள்ளும் இன்ப மருகனே,
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே. ... சிவந்த, அழகிய
சதங்கையும் சிலம்பும் தண்டையும் அணிந்து, திருச்செந்தூரில்
எழுந்தருளும் கந்தனே, எங்கள் பெருமாளே.
1
Similar songs:
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song